Saturday, July 6, 2013

எது பூ எது நீ ? - 20 குறுங்கவிதைகள்


உன் எழில் இப்
பிரபஞ்சத்தின் அளவென்று 
சொல்லிக் கொண்டிருக்கையில் 
கேட்டுக் கொண்டிருந்த 
பிரபஞ்சம் 
சப்தமில்லாமல் 
தன் அழகைக் 
கள்ளத்தனமாய் 
கூட்டிக் கொண்டே போனது...
எல்லையில்லாப் பேரழகு 
என்று சொல்லிப் பார்த்தேன்.. 
பிரபஞ்சம் எல்லைகளைக் 
கடந்து விரிந்து கொண்டிருந்தது ! 
அடப் போ ! 
உன் அழகு பிரபஞ்சத்தின் அளவோ 
நிலவின் அளவோ 
பால்வெளியின் அளவோ இல்லை 
அது உன் அளவு ! 


••
துன்புறுத்தல் 
வெறுத்தல் 
பழித்தல் 
இம்சித்தல் 
எதிர்த்தல்
என எல்லா 
மண்ணையும் 
தள்ளிக் குழியில் 
போட்டொரு 
விதையை மறைத்தான்
மனிதன் !
இருப்பினும்
எட்டிப் பார்த்து
சிரித்தது ஒரு பூ
••
அன்பு !

            

••
எனக்குப்பிடித்த
எல்லா இசையையும்
வாசித்து வதைக்கிறது
உன் பொன்னுதட்டு
வீணைநரம்புகள்! 
••


••
இமைமூடாதொரு
புகைப்படமொன்று..
இமைக்க விடாமல்
என்னை இம்சிக்கிறது..
மூடாத உன்
கண்களுக்குள்..
ஒரு மூன்று லட்சம்
கவிதைகளுக்கு மேல்
பொதிந்து கிடக்கும் 
அமைதி
அழகு
எதார்த்தம் ..
மூன்றிலும்
மூழ்கிப்போனேன் !





••
இன்னொரு முறை
என் கைப்பிடித்துக்கொள் !
மீண்டுமொருமுறை
கடவுளின் கைகளுக்குள்
என்னை குடியமர்த்து !



••
எனக்கான காதலையும் 
சிலநேரம்
உன் வசமாக்கிக் கொள்கிறாய் ...
அப்போது மட்டும் 
உன்மேல் தீராத கோபம் 
மற்ற நேரங்களில் 
எப்போதும் 
மாறாப்ரியம் தான் கண்ணா !
••
••
ஒன்று 
பேசிவிட்டுச் சிரி, 
இல்லை சிரித்துவிட்டுப் பேசு...
எதை முழுமையாய் ரசிப்பதென 
பூக்களும் நானும் 
திணறிப்போகிறோம்...
பார்த்து கொஞ்சம் 
கருணை செய் !
••
                  பிரபாகரன் சேரவஞ்சி


           என் எல்லா காதலையும் 
கொட்டித் தீர்த்திட 
உன்போல் 
வார்த்தைகள் 
கிடைப்பதில்லை 
என்கிறாய்...
ஹ்ம்ம் 
எனக்கும் நீ இல்லாமல் 
இருந்திருந்தால் 
ஒரு குட்டிக் கவிஞன் 
பிறக்காமலே இறந்திருப்பேன்!
••

••
பூக்களென்பது
வெறும் பூக்கள் 
மட்டும் தான்... 
அதன் வாசமெல்லாம் 
உன்னிலிருந்து 
திருடப்பட்டவை 
••
               பிரபாகரன் சேரவஞ்சி



கொலை செய்வதற்கு ஒன்றும்                                                  
வாழவைப்பதற்கு ஒன்றும் என 
மொத்தம்
 இரண்டு வைத்திருக்கிறாள்,..
எது வாழவைக்கிறது 
எது சாகடிக்கிறது 
எனப் புரியாமல் 
செத்துக் கொண்டே 
பார்த்துக் கொண்டிருக்கிறேன் !
பார்த்துக் கொண்டே வாழ்ந்து 
கொண்டிருக்கிறேன் !




••
எல்லாம் சூழ்ந்திருக்கிறது.. 
என்னெனவோ என்னைக் 
கட்டியணைத்துக் கொஞ்சுகிறது ...
சிரிக்க வைக்க எத்தனிக்கிறது 
அது வரமென்று 
நொடிக்கொருமுறை சொல்லிக் 
கொண்டே இருக்கிறது... 
நான் போதுமென்கிறது..
நல்லது ! நிற்க.

ஏதுமில்லாத் தனிமையில் 
எங்கேனும் ஒரு மூலையில் 
சுருண்டு படுத்துக்கொண்டு 
உன்னை உயிருக்குள் 
கொஞ்சம் கொஞ்சமாய்ஊற்றி 
நிறைத்துக் கொண்டிருப்பேனே.. 
அந்நொடியைப் பற்றி 
யாருக்கும் தெரியாதா ?
எதற்கும் புரியாதா ?

ஏன் என்னை வஞ்சச் சிரிப்பில் 

மூழ்கடிக்கப் பார்க்கிறார்கள் ?

ஏன் என் வரமாய் 
எல்லா பொய்களையும் 
திணிக்கிறார்கள் ?

யாதொன்றும் சுகமெனப் 
படுவதில்லை..
ஏதொன்றும் சாஸ்வதமாய் 
தெரிவதுமில்லை...

என் தனிமைக்கோவிலில் 
என் தெய்வத்தின் 
நினைவுக் காலடியில் 
கொஞ்ச நேரம் அமர்ந்து 
இளைப்பாறுகிறேன்.. 
வாழ்க்கையின் பேரழகு 
கண்முன் விரிந்து கிளைபரப்பி 
விஸ்வரூபமெடுத்து நிற்கிறது !
அப்போது மட்டும் தான் 
வாழ்வொரு வரமெனப்படுகிறது !
போதும்.
அது போதும் !
••
               பிரபாகரன் சேரவஞ்சி

••
நெற்றியிலொரு
முத்தமிட்டெழுப்பு..
நீ கொடுக்கும்
வரத்திலிருந்துதான்
என் நாட்களின்
சந்தோஷங்கள்
நல்லபடி
துயிலெழுகின்றன !

••
            பிரபாகரன் சேரவஞ்சி


••
வாழ்க்கையின் பாதையில்
விதியடித்துத் துண்டானதோ.,
விடாமல் இன்றும் தொடர்கிறதோ
நம் இதயங்களின் தடங்கள்..
யார் எங்கிருப்பினும்  
நொடி நினைப்பில்
தூறல் விழும்..
மழை பெய்யும்..
கண்கள் குளமாகும் !
எத்தனை அழுதாலும்
அழுது முடித்ததும்
சிரிப்பு வரும்
..
..
அதுதான் காதல்!

••
கொஞ்சல்களுக்கு 
நீ செவிகொடுக்கும்போது
குழந்தையாகிக்
கசிந்துருகும்
தேவராகத்தை
எங்கிருந்து கற்றாய் நீ !
அப்பா !
அணைத்துக் கொ(ல்)ள்கிறது !
குரல்
••

                     
                      ••
    ஒரு கையில் 
        என் எல்லா அன்பையும் 
       அள்ளிக் கொண்டு
மறுகையில் 
  உலகனைத்தையும் 
கதவடைக்கிறாய்..
போதுமென்கிறாய் 
 நான் போதுமென்கிறாய் !
மூச்சுப் பேச்சற்று நிற்கிறேன்..
நான் போதுமென்கிறது
என் உலகம் !
நான் போதுமென்கிறது!
••
                பிரபாகரன் சேரவஞ்சி

    Pic : Aa Photography

             
   ••
    உயிரை விட்டு வெளியில் 
   பொங்கிப் பாய்கிறது அன்பு..
   கட்டி யணைபோட்டு 
செவ்வுதட்டில் தேக்கப் 
பார்க்கிறது முத்தம் !
இருந்தும் அணை உடைகிறது..
இன்பத்தில் ஈருயிர் கலக்கிறது ...
நிலவுகள் திரையிட்டு 
முயங்கிப் போகிறது !
அப்பப்பா...
பெருவாழ்வு வாழ்கிறது காதல் !
பெருவாழ்வு ! 
••














           
 ••
            எவ்வளவு பிடிக்குமென்றால்   
             என்ன பொய் சொல்லட்டும் ?

          கவிதையும் ஏதும் 
         தோன்றாத போது 
          எப்படிச் சொல்லட்டும் ?

          நினைத்துக் கொண்டே
                                          இருக்கும் அளவிற்கும் ..
    
          பார்த்துக் கொண்டே
          இருக்கும் அளவிற்கும் ..

       ரசித்துக் கொண்டே
       உருகும் அளவிற்கும் ..

  சுவாசித்து கொண்டே 
  ஜீவிக்கும் அளவிற்கும் 
 பிடிக்கும் !

          இப்போதைக்கு இவ்வளவுதான் !

     ••

         
                          

                ••
          காலையில் எழுந்து 
          கண்ணாடி பார்த்துச் 
          சிரிக்கையில் 
         பூக்களின்
             புதுமின்னலொன்று 
          உதட்டைப் பிளந்து
           சிரிப்பைத் தெறித்து
          உயிருக்குள் 
           இறங்கிக்கொண்டிருந்தது...
          இது யாரின் வேலை என்று
          காற்றிடம் கேட்டேன் ...
           உதடுகளில் சின்னதாய்
          உன் முகம் வரைந்து காட்டி
          மறைந்து போனது ...
   
          அழகான காலைக்கும்
          ஆஸ்வாசமான காற்றுக்கும்
        அத்தனை சாமிக்கும்
         மேலான என்அழகிக்கும்
         நன்றி! 
        ••
                  பிரபாகரன் சேரவஞ்சி

        
   ••
           கண்ணெதிரில் 
        புன்னகை யாழ் 
       மீட்டுகிறாள்..
           பொன்னிதழ் நரம்பில் 
              பூகம்பமாய்க் கிளம்பிய
         பட்டாம்பூச்சிகள் 
    கொஞ்சம் 
             வேகமெடுத்து வந்தென் 
    வயிற்றுக்குள்  
            நுழைந்துகொண்டு
                 என்னமோ செய்கிறது !
            என்னென்னமோ ..
              என்னென்னென்னென்னமோ
••

             
••
பூக்கள் அழகா 
        இல்லை நானா என்றாய்.. 
  எது பூ 
    எது நீயெனப் 
   புரியாமல் 
  வெகுநேரமாய் 
  யோசித்துக் கொண்டே 
     இருக்கிறேன்... 
••