Saturday, June 8, 2013

பெண்ணெனும் பெருங்கடவுள்

பெண்ணெனும் பெருங்கடவுள் 


••
உண்மைதான்
பெரும்பிழையின் 
கோர்வை நான் !

என்னை தண்டித்துக் கொண்டே
இருக்கிறது உலகம்
மன்னித்துக் கொண்டே
அணைக்கிறாய் நீ !

குற்றம் சொல்லியே
குத்திக் கொல்கிறது உலகம்
கூட இருந்தே
திருத்திக் கொண்டிருக்கிறாய் நீ !

எடை போட்டு க் குறை
சொல்கிறது உலகம் !
உனைநிரப்பி என் உயிருக்கு
பலம் கூட்டுகிறாய் நீ !

குற்றவாளி என்கிறார்கள்
குறையில்லா சில நீதிபதிகள்..
அன்பெனும் ஆழி
என்கிறாய் நீ !
அழகாக அழகாக்கி
நேசிக்கிறாய் நீ !

ஏமாற்றுகிறேன்
என்கிறது உலகம் !
எனக்குத் தெரியும் நீ
யாரென்றென்கிறாய் !

நாடகமாடுகிறேன்
என்கிறார்கள்
நயமான நல்லவர்கள் !
நா அடக்கம் கற்றுப்
பேசாமல் பொறுத்திரு
என்கிறாய் நீ !

பொறுத்திருக்கிறேன் !

உண்மை என்னவோ
பெரும் பிழைகளின்
கோர்வை நான் !
திருத்தி ரசிக்கும்
பெருங்காதல்க்காரி நீ !

ஊருக்கு விவரமாய்
எடை போட்டு
வாழத் தெரிந்திருக்கிறது !
உனக்கு மட்டும் ஏன்
காதலைத் தவிர வேறு
பாதையே தெரிவதில்லை ?

ஆம் !
பெரும் பிழைகளின்
சாத்தான் நான் !
பெண்ணாக வந்தென்னை
பிழைதிருத்தும் பெருங்கடவுள் நீ !

ஒவ்வொரு உயிருக்கும்
உன்னைப் போலொரு
கடவுள் பரிசாகக் கிடைக்க வேண்டும் !

என்னைப் போலவே
எல்லா உயிரும்
அன்பில் இன்புற்றிருக்க வேண்டும் !
••
பிரபாகரன் சேரவஞ்சி

No comments:

Post a Comment